உள்ளூர் செய்திகள்
தி.மு.க.வை வெற்றி பெற வைத்தால் கோவையில் மாதம் 10 நாட்கள் தங்கி மக்கள் பணியாற்றுவேன் - உதயநிதி
கோவையில் அ.தி.மு.க. வென்றதற்கு பணம் ஒரு காரணமாக இருந்தாலும், நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பதாகவே நினைக்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவை:
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நடந்தது.
கூட்டத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பல்வேறு இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றாலும், கோவை மக்கள் ஏமாற்றி விட்டனர். கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பணத்தை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
கோவையில் அ.தி.மு.க. வென்றதற்கு பணம் ஒரு காரணமாக இருந்தாலும், நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பதாகவே நினைக்கிறேன். தேர்தலின் போது கட்சிக்கு எதிராக வேலை செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள பாக முகவர்களாகிய நீங்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும்.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் மற்றும் மாவட்டம் முழுவதும் 800 நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்தவரை அமர வைப்போம்.
மேயர் மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவராக தி.மு.க. உறுப்பினரை அமர வைப்போம் என்று நீங்கள் அளித்த உறுதி மொழியை மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பேன்.
கோவையில் 100 சதவீதம் வெற்றி என்ற இலக்கை அடையும் வரை ஓயக்கூடாது. வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை கொடுத்தால் மாதந்தோறும் 10 நாட்கள் கோவையில் தங்கி பணியாற்றுவேன்.
இதையும் படியுங்கள்...5 மாநில தேர்தல் - மத்திய சுகாதாரத்துறையுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை