உள்ளூர் செய்திகள்
பரமக்குடியில் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை
பரமக்குடியில் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருமாள்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித மற்றும் சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் ஆல்பர்ட் வளவன்பாபு (வயது40), ராமராஜா (39) ஆகியோர் மீது 13 மாணவிகள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆசிரியர் ராமராஜா கைது செய்யப் பட்டார்.
ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கூறியதாவது:-
பரமக்குடி அருகே பெருமாள்கோவில் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள், 2 ஆசிரியர்கள் மீது புகார் கூறி உள்ளனர். ஆசிரியர்கள் மீதான பாலியல் புகாரை ஏற்கனவே மாவட்ட அளவில் உள்ள பெண்கள் பாதுகாப்புக் குழு விசாரித்ததன் அடிப் படையிலே குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் விசாரித்து போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் ஆசிரியரை கைது செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆகவே துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை பெறப்படும். அதனடிப்படையில் 2 ஆசிரியர்கள் மீதும் சட்ட ரீதியாக தற்காலிக பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.