சென்னையில் 100 கடைகளுக்கு சீல் - குட்கா விற்றதாக அதிகாரிகள் நடவடிக்கை
சென்னை:
சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்கும் கடைக்காரர்கள் மீது போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சமீபத்தில், மாநகர எல்லைக்குள் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் சுமார் 11.66 டன் அளவு கொண்ட குட்கா, ஜர்தா, ஹான்ஸ் உட்பட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அந்த கடைக்காரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவும் செய்தனர். தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததால் போலீசார் சோதனையின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்ட 100 வணிக கடைகளுக்கு சென்னை மாநகர சட்டம் 1919, பிரிவு 379கி(1)ன்படி சீல் வைத்து மூடப்பட்டது.
எனவே, சென்னை மாநகர பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை எக்காரணம் கொண்டும் சேமித்து வைக்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது. மீறினால் காவல் துறையுடன் இணைந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி அறிவித்துள்ளார்.