உள்ளூர் செய்திகள்
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருடிய ஆட்டோ டிரைவர் கைது
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருடிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
பென்னாகரம் அருகே உள்ள மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவருடைய மனைவி பிரசவத்திற்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதனால் சிங்காரம் அங்குள்ள பார்வையாளர் காத்திருக்கும் அறையில் செல்போனை சார்ஜரில் பொருத்தி விட்டு அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் செல்போனை திருடி கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிங்காரம் மற்றும் சிலர் அவரை விரட்டி பிடித்து செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்த நபர் பாலக்கோட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜமீல் (வயது 32) என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜமீலை கைது செய்தனர்.