செய்திகள்
சிறுமி மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்த கொடூர தந்தை

பணகுடி அருகே சிறுமி மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்த கொடூர தந்தை

Published On 2021-11-18 11:02 GMT   |   Update On 2021-11-18 11:02 GMT
பணகுடி அருகே கடையில் பிஸ்கட் வாங்கிவிட்டு அதற்குரிய பணத்தை கொடுக்காமல் வந்ததாக சிறுமி மீது தந்தை மண்எண்ணையை ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை:

கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளையை சேர்ந்தவர் குருநாதன். இவரது மனைவி சுஜா (வயது 34).

இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கணவர் இறந்து விட்ட நிலையில் சுஜா அதே பகுதியை சேர்ந்த ஜேசு அந்தோணி ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே குழந்தைகளுடன் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் சுஜா நேற்று வேலைக்கு சென்று விட்டார். இவர்களது மகளான மகேஸ்வரி (10) என்பவர் அங்குள்ள ஒரு கடையில் பிஸ்கட் வாங்கிவிட்டு அதற்குரிய பணத்தை கொடுக்காமல் வந்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக அந்தோணிராஜிடம் கடை வியாபாரி புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தோணி ராஜ் வீட்டிற்கு சென்று 3 குழந்தைகளிடம் அதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் ஆத்திரம் அடைந்த அவர் 3 குழந்தைகள் மீதும் மண்எண்ணையை ஊற்றி தீவைத்தார். இதில் மகனும், ஒரு மகளும் கூச்சலிட்டவாறு அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்கள் மீது லேசாக தீப்பிடித்து. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்கள் மீது பற்றிய தீயை அணைத்தனர்.

பின்னர் கடையில் இருந்து வீடு திரும்பிய சுஜா மற்றும் பொதுமக்கள் வீட்டில் தீப்பிடித்த நிலையில் இருந்த மகேஸ்வரியின் உடலில் இருந்த தீயை அணைத்து படுகாயமடைந்த அவரை நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் தீக்காயம் காரணமாக ஜேசுஅந்தோணி ராஜூம் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பான புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News