செய்திகள்
தற்கொலை

செல்போன் வாங்கித்தராததால் பள்ளி மாணவி தற்கொலை

Published On 2021-11-05 09:44 GMT   |   Update On 2021-11-05 09:44 GMT
பெற்றோர் செல்போன் வாங்கித்தராததால் விரக்தியடைந்து பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் புதுக்கடை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிள்ளியூர்:

புதுக்கடை அருகே உள்ள பூட்டேற்றி தொழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். விவசாயி. இவரது மகள்கள் ஆரதி, வீனா(வயது15). ஆரதி லேப் டெக்னீசியனுக்கு படித்தார். அவரது தங்கை வீனா அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும் படித்து வந்தார்.

இந்நிலையில் ஆரதிக்கு அய்யப்பன் செல்போன் வாங்கி கொடுத்திருக்கிறார். இதனால் தனக்கும் செல்போன் வாங்கித்தருமாறு பெற்றோரிடம் வீனா கேட்டுள்ளார். அதற்கு பிளஸ்-2 முடித்ததும் வாங்கித் தருவதாக கூறியிருக்கின்றனர். ஆனால் தனக்கு இப்போதே செல்போன் வேண்டும் என்ற மாணவி கேட்டுள்ளார்.

அதற்கு அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர். பெற்றோர் செல்போன் வாங்கித்தராததால் விரக்தியடைந்த மாணவி வீனா, கடந்த 2-ந்தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கருங்கல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதற்குள் மாணவி வீனா இறந்துவிட்டார். இது குறித்து புதுக்கடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர் செல்போன் வாங்கித்தராததால் விரக்தியடைந்து பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் புதுக்கடை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News