செய்திகள்
கைது

அவனியாபுரத்தில் பெட்ரோல் குண்டு வீசிய 4 வாலிபர்கள் கைது

Published On 2021-11-02 08:22 GMT   |   Update On 2021-11-02 08:22 GMT
மதுக்கடை திறக்கப்பட்ட முதல் நாளே அவனியாபுரத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவனியாபுரம்:

மதுரை அவனியாபுரம் ஜே.ஜே.நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகன் கார்த்திகேயனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் பாலமுருகனுக்கும் முன் விரோதம் இருந்தது.

நேற்று பாலமுருகன், அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் குரு, பிரகாஷ், முனியசாமி ஆகிய 4 பேரும் சேர்ந்து கார்த்திகேயன் வீட்டிற்குச் சென்று அவரை அழைத்தனர்.

அவர் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த பாலமுருகன் மற்றும் கூட்டாளிகள் கார்த்திகேயன் வீட்டின் வெளியே பெட்ரோல் குண்டு வீசினர்.

இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து அவனியாபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் சந்தனபோஸ் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று அந்தப்பகுதியில் மறைந்திருந்த பெட்ரோல் குண்டு வீசிய 4 வாலிபர்களையும் கைது செய்தனர்.

மதுரையில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த மருதுபாண்டியர், தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் 4 நாட்கள் மதுபான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

தற்போது மதுக்கடை திறக்கப்பட்ட முதல் நாளே அவனியாபுரத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags:    

Similar News