search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் குண்டு வீச்சு"

    • கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமம் உள்ளது.
    • குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமம் உள்ளது. இங்கு பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அம்பேத்கர் சிலை உள்ளது. அங்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அக்கும்பல் திடீரென்று அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீசியது. அந்த குண்டு அம்பேத்கர் சிலை மீது பட்டு பழைய ஊராட்சி மன்ற கட்டிட வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து, 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க விரட்டினர்.

    ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இத்தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பெருமளவில் அந்த பகுதியில் திரண்டனர். குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் தொகுதி செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் இளையராஜா, நகர செயலாளர் அம்பேத் மற்றும் நூற்றுக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் அந்த பகுதியில் மீண்டும் திரண்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    இதனை தொடர்ந்து துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு பால் ஊற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் சிலை மற்றும் பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

    • மாரிச்செல்வம் வீட்டின் முன் பகுதியில் கிடந்த பொருட்கள் சேதம் அடைந்தன.
    • ரேஷன் அரிசி கடத்தல் கும்பலின் வாகனத்தை சமீபத்தில் விருதுநகரில் வைத்து போலீசார் பிடித்துள்ளனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜு நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவர் வக்கீல் தொழில் செய்து வருகிறார்.

    நேற்று நள்ளிரவில் அவரது வீட்டுக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் மாரிச்செல்வம் வீட்டின் மீது அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசியது.

    இதில் மாரிச்செல்வம் வீட்டின் முன் பகுதியில் கிடந்த பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் மாரிச்செல்வம் பக்கத்து வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த அவரது வாகனத்தையும் அந்த கும்பல் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றது.

    மேலும் மாரிச்செல்வத்திற்கு சொந்தமான ஊத்துப்பட்டி செல்லும் சாலையில் உள்ள தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தையும் அந்த கும்பல் தீ வைத்து விட்டு தப்பி சென்றது.

    இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் மாரிச்செல்வம் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து மாரிச்செல்வத்துக்கு தொழில் ரீதியாக ஏதேனும் முன் விரோதம் ஏற்பட்டு அந்த பிரச்சனையில் யாரேனும் பெட்ரோல் குண்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிச்செல்வத்துக்கு தெரிந்த சிறுவனை ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் ஒன்று வீடுகளில் ரேஷன் அரிசி வாங்கி தர கட்டாயப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வக்கீல் மாரிச்செல்வம் அந்த கும்பலிடம் கேள்வி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதற்கிடையே ரேஷன் அரிசி கடத்தல் கும்பலின் வாகனத்தை சமீபத்தில் விருதுநகரில் வைத்து போலீசார் பிடித்துள்ளனர்.

    இதனால் வக்கீல் மாரிச்செல்வம் தான் தகவல் கொடுத்திருக்க வேண்டும் என்று நினைத்து ஆத்திரமடைந்த அந்த கும்பல் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    எனினும் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முத்துராஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
    • விக்ரம் வீட்டுக்கு சென்று அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாள முத்துநகர் தாய் நகரை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 24). இவர் தனது நண்பர்களான ரிஜோ (21), ஹவுசிங் போர்டு விக்னேசுவரன் (20) மற்றும் வாலிபர்கள் 2 பேருடன் சேர்ந்து கதிர்வேல்நகர் குப்பைகிடங்கு அருகில் மது குடித்தனர்.

    அப்போது அங்கு வந்த விக்ரம் (22), ராபர்ட் ஆகிய 2 பேருக்கும் முத்துராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த விக்ரம், ராபர்ட் ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து முத்துராஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

    இதில் படுகாயமடைந்த முத்துராஜ் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் முத்துராஜின் நண்பர்கள் நள்ளிரவில் பிஅன்டி காலனியில் உள்ள உள்ள விக்ரம் வீட்டுக்கு சென்று அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

    இதில் வீட்டின் வளாக முன்பகுதியில் விழுந்த பெட்ரோல் குண்டுகள் வெடித்து தீப்பிடித்தது. வீட்டில் உள்ளவர்கள் உடனே தீயை அணைத்தனர். இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில், சிப்காட் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஹவுசிங் போர்டு திருமுருகன் (19), ஸ்வீட்டன் ரிஜோ (21) ராஜகோபால் நகர் சந்தோஷ் ராஜா (20) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் மில்லர் புரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (20), மதன் (18) ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    • ஆர்ப்பாட்டம் முடிந்து நிர்வாகிகள் மட்டும் அந்தப் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அப்பகுதி மாடி கட்டிடத்தில் இருந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு முன்கூட்டியே முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூரில் நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டியல் இன மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்யக்கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மண்டல செயலாளர் சிவகுமார், வடக்கு மாவட்ட செயலாளர் இளமதி அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டம் முடிந்து நிர்வாகிகள் மட்டும் அந்தப் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அப்பகுதி மாடி கட்டிடத்தில் இருந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அங்கு பேசிக் கொண்டிருந்த இளமதி அசோகனின் சேலையில் தீ பிடித்தது.

    இதைத் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மழையூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 8 மணிக்கு தொடங்கிய மறியல் நள்ளிரவு ஒரு மணி வரை நீடித்தது. பின்னர் புதுக்கோட்டை உதவி கலெக்டர் ஐஸ்வர்யா நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.

    பின்னர் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடுத்த புகாரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பா.ஜ.க பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறியிருந்தனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு முன்கூட்டியே முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் காவல்துறை அனுமதி அளித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீசாரின் அலட்சியத்தால் தான் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து மழையூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் முருகேசன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் அன்பு மற்றும் அன்பு ராஜா ஆகிய 3 பேரை அதிரடியாக ஆயுதப்படைக்கு பணியிடம் மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டுள்ளார்.

    • லிங்கராஜன் வழக்கம் போல தனது பிளக்ஸ் கடையில் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார்.
    • போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை அடுத்த வீரசோழன் அருகேயுள்ள ஏ.தரைக்குடி பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜன் (வயது 28). இவர் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் இவர் வீரசோழன் தொடக்கப்பள்ளி அருகே டிஜிட்டல் பிளக்ஸ் மற்றும் ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். தற்போது டி.புனவாசல் பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் லிங்கராஜன் வழக்கம் போல நேற்று தனது பிளக்ஸ் கடையில் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம வாலிபர்கள் இவரது கடை மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில் லிங்கராஜன் காயமின்றி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து வீரசோழன் போலீஸ் நிலையத்தில் லிங்க பாண்டியன் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் மாலை லிங்கராஜனின் ஊரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் வீரசோழன் அரசுப்பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் பள்ளி முடிந்து பஸ் ஏற வந்தபோது அங்குள்ள கடையில் பாணி பூரி சாப்பிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த வீரசோழன் தெற்குத்தெருவை சேர்ந்த கொங்குசெல்வம் (19) என்பவர் தான் சப்பிட்டதற்கும் பணம் தருமாறு கூறியுள்ளார்.

    ஆனால் மாணவர்கள் பணம் கொடுக்க மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த கொங்குசெல்வம், சசிகுமார் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன பள்ளி மாணவர்கள் லிங்கராஜனிடம் சென்று அழுதுகொண்டே நடந்ததை கூறியுள்ளனர். இதற்கிடையில் கொங்கு செல்வமும் மாணவர்களை பின் தொடர்ந்து பிளக்ஸ் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்களை லிங்கராஜன் கண்டித்து அனுப்பியுள்ளார். இந்தநிலையில் தான் கொங்குசெல்வம் தனது கூட்டாளியுடன் சேர்ந்து லிங்கராஜனுக்கு சொந்தமான பிளக்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டை வீசி தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    எந்நேரமும் ஆள் நடமாட்டமுள்ள வீரசோழன்-அபிராமம் சாலையில் பிளக்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வீரசோழன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • வெடிக்காமல் இருந்த மீதமுள்ள 2 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் தமிழருவி. இவர் வாணியம்பாடி பஸ் நிலையத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பேக்கரியில் ஒரு ஊழியர் மற்றும் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்தனர். திடீரென மது பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி, அதனை பற்ற வைத்து பேக்கரியில் வீசினர். அதில் ஒரு பாட்டில் மட்டும் வெடித்து சிதறியது. இதில் கடையில் தீ பிடித்து எரிந்தது. கடையில் இருந்த பொருட்கள் தீயில் கருகியது. மேலும் தீ மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதனை கண்ட ஊழியர் அதிர்ச்சி அடைந்து தீயை அணைக்க முயன்றார். அப்போது அவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. மர்ம கும்பல் கடைக்குள் புகுந்து ஊழியரை மிரட்டி தாக்க முயன்றனர். அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சுதாரித்து கொண்ட மர்ம கும்பல் அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் வாணியம்பாடி டவுன் போலீசாருக்கும் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கடையில் மேலும் தீ பிடிக்காமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அங்கு வெடிக்காமல் இருந்த மீதமுள்ள 2 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசி, ஊழியரை மிரட்டி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • வருவாய்த் துறை மற்றும் இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலையில் உள்ள கேசவன் நகரில் வசித்து வருபவர் பெரி.செந்தில். இவர் அகில பாரத இந்து மகாசபையின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.

    அவர் இன்று காலை வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது, வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு பெரி.செந்தில் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அவரது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் நேற்று நள்ளிரவு 12.10 மணியளவில் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், பெரி.செந்தில் வீட்டிற்கு வருவதும், பெட்ரோல் நிரப்பபட்ட பாட்டிலில் தீயை வைத்து வீட்டின் வாசலில் வீசி விட்டு அங்கிருந்து செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.

    அந்த பதிவை கைப்பற்றிய போலீசார், பெட்ரோல் குண்டு வீசிய நபர் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் எதிரில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இடம் பலரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அகில பாரத இந்து மகா சபா சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    இது தொடர்பான கூட்டம் உளுந்தூர்பேட்டை தாசில்தார் தலைமையில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அகில பாரத இந்து மகா சபாவின் பொதுச்செயலாளர் பெரி.செந்தில், கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதற்கு வருவாய்த் துறை மற்றும் இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எனவே நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களில் யாரேனும் பெரி.செந்தில் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசினார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. வெடி பொருட்கள் தடுப்பு சட்டம், கூட்டு சதி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது.
    • மாநில போலீசாரிடம் இருந்து கருக்கா வினோத் வழக்கு ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்படும்.

    சென்னை:

    சென்னை கிண்டி கவர்னர் மாளிகை முன்பு கடந்த மாதம் ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக கவர்னர் மாளிகை தரப்பில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கருக்கா வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் கருக்கா வினோத் பின்னணியில் சில தடை செய்யப்பட்ட அமைப்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை என்னும் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த பா.ஜ.க. தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான அறிக்கை அனுப்பினார். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இதையடுத்து சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. வெடி பொருட்கள் தடுப்பு சட்டம், கூட்டு சதி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது.

    இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் கேட்ட போது, கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். விரைவில் மனுதாக்கல் செய்யப்படும். இதுபற்றி மத்திய உளவுப் பிரிவுக்கு என்.ஐ.ஏ. தெரிவிக்கும். இதையடுத்து தமிழக டி.ஜி.பி.க்கு அவர்கள் தகவல் தெரிவிப்பார்கள்.

    அதன் பின்னர் மாநில போலீசாரிடம் இருந்து கருக்கா வினோத் வழக்கு ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்படும். அதனை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்ற விசாரணை தொடரும். கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்கும் போது, ஜெயிலில் அவனிடம் யார்-யார் பழகினார்கள். வெளியில் இருந்து அவனை இயக்கினார்களா? என விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கவனர்னருக்கு என சில அதிகாரங்கள் உள்ளன. அதற்கு ஏற்ப அவர்கள் செயல்படுகின்றனர்.
    • தமிழக அரசு தொழில்துறை ஊக்குவிக்க தவறி வருகிறது. தொழில்துறையை ஊக்குவிக்க வேண்டும்.

    கோவை:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய மந்திரி எல்.முருகன் இன்று காலை விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.

    கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஜவுளி தொழில் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது இந்த பகுதிகளில் ஜவுளி தொழிலானது நலிவடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தி.மு.க கொண்டு வந்த மின் கட்டண உயர்வு தான்.

    தொழில்களுக்கு மட்டுமின்றி, வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

    தொழில்துறையினர் மின்கட்டண உயர்வை குறைக்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு அதனை கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே அரசு இதில் கவனம் செலுத்தி, ஜவுளி துறையினர் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    நெல்லையில் பட்டியலின மாணவர் மீது வன்கொடுமை தாக்குதல் நடந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வேங்கைவயல் விவகாரத்தின் போதே அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால், தற்போது நெல்லையில் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது.

    எனவே இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. மக்கள் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

    மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு 1000-க்கும் மேற்பட்ட தேவையற்ற சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் தொழில்துறையினருக்கு ஆதரவாக பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    தமிழக அரசு பா.ஜ.கவினரை தேடி பிடித்து வழக்கு போட்டு வருகிறது. வழக்குகளுக்கு எல்லாம் பா.ஜ.க அஞ்சுவது கிடையாது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை சந்தித்து, இன்னும் வேகத்துடன் வேலை செய்பவர்கள் தான் பா.ஜ.கவினர். எனவே வழக்கு போட்டு எங்களை அடக்கி விடலாம் என நினைக்க வேண்டாம்.

    அரசு அனுப்ப கூடிய கோப்புகளில் எல்லாம் கண்ணை மூடி கொண்டு கையெழுத்து போடுவது கவர்னரின் வேலை அல்ல. அதனை படித்து பார்த்து, அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டத்தான் செய்வார்.

    இவர்களுக்கு தாங்கள் அனுப்பும் கோப்புகளில் எதுவும் கேட்காமல் கையெழுத்து போட்டால் கவர்னர்கள் நல்லவர்கள். இல்லையென்றால் கெட்டவர்கள் போன்று சித்தரிப்பார்கள். இதுதான் வழக்கமாக உள்ளது.

    கவர்னர் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்தும், அதில் கைதான நபரின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்தும் விரிவாக விசாரிக்க வேண்டும்.

    தமிழகத்தில் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தொழில்துறை ஊக்குவிக்க தவறி வருகிறது. தொழில்துறையை ஊக்குவிக்க வேண்டும்.

    கவர்னர்களை எதிர்த்து தமிழக, கேரள அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இப்படி எல்லாம் அவர்களை மிரட்டி ஒன்று செய்ய முடியாது. கவனர்னருக்கு என சில அதிகாரங்கள் உள்ளன. அதற்கு ஏற்ப அவர்கள் செயல்படுகின்றனர். மேலும் கவர்னர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடையில் பணியில் இருந்த காசாளரிடம் கடனுக்கு சாராயம் கேட்டுள்ளனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு சந்தை தோப்பு எதிரில் சாராய கடை உள்ளது.

    இந்த சாராய கடையை ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த விஜயன் என்பவர் நடத்தி வருகிறார். மர்மநபர்கள் 3 பேர் இரவில் சாராய கடைக்கு வந்தனர்.

    அவர்கள் கடையில் பணியில் இருந்த காசாளரிடம் கடனுக்கு சாராயம் கேட்டுள்ளனர்.

    ஆனால் அவர் சாராயம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் காசாளரி டம் தகராறு செய்து அங்கிருந்து சென்று விட்டனர்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து 3 பேரும் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் திடீரென சாராய கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசினர். அந்த பெட்ரோல் குண்டு கடையின் முன்பு விழுந்து வெடித்து தீப்பிடித்தது.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சாராய கடை ஊழியர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

    மேலும் 3 பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்கள் தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து திருபுவனை போலீசில் காசாளர் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    • தேவர் திருமகன் என அன்போடு அழைத்தவர் முன்னாள் முதலமைச்சர் அண்ணா.
    • தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தியவர் கருணாநிதி.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அவரது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா 3 நாட்கள் வெகுவிமரிசையாக நடத்தப்படும். அந்த வகையில் தற்போது 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கியது.

    முதல் நாளான 28-ந் தேதி முத்துராமலிங்க தேவரின் ஆன்மீக விழா நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் தொடங்கி நடைபெற்றது. அங்கு தமிழக அரசு சார்பில் தேவரின் புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.

    பொதுமக்கள் ஏராளமானோர் பால்குடம், ஜோதி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2-ம் நாளான நேற்று அரசியல் விழாவாக நடைபெற்றது. இதில் தேவரின் அரசியல் பயணம் குறித்து சொற்பொழிவுகள் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி அவரது நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன் விழாக்கோலம் பூண்டிருந்தது. அவரது நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேவர் திருமகன் என அன்போடு அழைத்தவர் முன்னாள் முதலமைச்சர் அண்ணா. தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தியவர் கருணாநிதி.

    தேவர் நூற்றாண்டு நூலகம், தேவர் புகைப்பட கண்காட்சி அரங்கம் போன்றவற்றை அமைத்தவர் கருணாநிதி. மதுரை மேம்பாலத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டியவர் கருணாநிதி.

    கமுதி, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேவர் பெயரில் கல்லூரி அமைய காரணம் கருணாநிதி.

    பசும்பொன்னில் பொதுமக்கள் எளிதாக அஞ்சலி செலுத்த இரண்டு மண்டபங்கள். பசும்பொன் கிராமத்திற்கு மட்டும் ரூ.2.05 கோடி செலவில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. மீனவர்களை மீட்க திமுக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீவர்கள் பிரச்சனைகளை பேச மீனவ பிரதிநிதிகளோடு திமுக எம்.பி., டி.ஆர்.பாலு டெல்லி சென்றார்.

    கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. கவர்னர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு பொய் பிரசாரம் பரப்பப்படுகிறது. கவர்னர் பாரதிய ஜனதா கட்சியாக மாறிவிட்டார், ஆளுநர் மாளிகையும் பாரதிய ஜனதா அலுவலகமாக மாறிவிட்டது. இதுதான் வெட்கக்கேடு.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    • சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு கருக்கா வினோத் யாருடன் தொடர்பில் இருந்தார் என விசாரணை.
    • கருக்கா வினோத் தங்களிடம் தொடர்பில் இல்லை என குடும்பத்தினர் தகவல்.

    சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பாதுகாப்பு மிகுந்த ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்காக வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்தின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில், சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு கருக்கா வினோத் யாருடன் தொடர்பில் இருந்தார் உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    அப்போது, சிறையில் இருந்தபோது தன்னை ஏன் சந்திக்கவில்லை என்று கருக்கா வினோத் சண்டையிட்டதாகவும், கருக்கா வினோத் தங்களிடம் தொடர்பில் இல்லை என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    ×