செய்திகள்
இறந்தவரின் உடலை ஒப்படைக்க ரூ.11 ஆயிரம் லஞ்சம்- சுகாதார ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை ஒப்படைக்க ரூ.11 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சுகாதார ஆய்வாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை நன்மங்கலத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், ‘எனது தந்தை இன்பசேகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். அவரது உடலை முறைப்படி எங்களிடம் ஒப்படைக்க மேடவாக்கம் சுகாதாரத்துறை ஆய்வாளர் தசரதன் ரூ.11 ஆயிரம் பணம் வாங்கினார்.
ஆனால் கொரோனாவால் உயிரிழந்தோரின் உடலை ஒப்படைக்க பணம் வாங்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. அதை மீறி பணம் வாங்கிய அதிகாரி தசரதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’, என்று கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தசரதன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.