செய்திகள்
மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - வாலிபர் கைது
முதலமைச்சர் முக ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம நபர் போன் செய்து பேசினார்.
அப்போது அவர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி விட்டு போனை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உஷாரானார்கள்.
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். மிரட்டல் வந்த போன் நம்பரை வைத்து துப்பு துலக்கப்பட்டது. அப்போது மிரட்டல் விடுத்த நபரின் பெயர் பழனிவேல், கடலூரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
சென்னை மாம்பாக்கம் பகுதியில் தங்கி இருந்து ஓட்டலில் வேலை செய்து வரும் பழனிவேல், சினிமா பாடராகி உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் பாட வேண்டும் என்பதற்காக இது போன்று மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.