செய்திகள்
முக ஸ்டாலின்

தரமற்ற அடுக்குமாடி வீடுகள் - ஐ.ஐ.டி. நிபுணர் குழு அறிக்கை: மு.க.ஸ்டாலினுடன் நாளை அதிகாரிகள் ஆலோசனை

Published On 2021-10-05 09:20 GMT   |   Update On 2021-10-05 09:20 GMT
புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் தரம் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் குடியிருக்கும் பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்தனர்.
சென்னை:

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சுமார் 2 ஆயிரம் வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டன.

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இந்த குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வீடுகளில் கட்டுமான பணி தரமற்று இருப்பதாகவும், கையால் தட்டினாலே சிமெண்ட் பூச்சுகள் உதிர்வதாகவும், இதனால் தாங்கள் உயிர் பயத்தில் வசித்து வருவதாகவும் அங்கு குடியிருப்பவர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் அதிகாரிகளுடன் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.

மேலும் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரம் குறித்து ஐ.ஐ.டி. அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஐ.ஐ.டி. (இந்திய தொழில்நுட்ப கழகம்) தலைமை செயல் பொறியாளர் பத்மநாபன் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் தரம் குறித்து ஆய்வு செய்து குடியிருக்கும் பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமானம் தரமில்லாமல் உள்ளதா? குடியிருப்பின் பாகங்கள் இடிந்துவிழ காரணம் என்ன? குடியிருப்பை கட்டியவர்கள் மீது என்ன நடவடிக்கை?

அடுத்தகட்ட பணிகள் என்ன? என்பது தொடர்பாக முழு அறிக்கையை நகர்புற மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனர் கோவிந்தராவ் இடம் நேற்று ஐ.ஐ.டி. நிபுணர் குழுவினர் தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ஐ.ஐ.டி. நிபுணர் குழுவின் அறிக்கை நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட உள்ளது.

இறுதி அறிக்கையில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக முதல்-அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்ட பின், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும்.

Tags:    

Similar News