செய்திகள்
கொலை

திருவள்ளூர் அருகே ஓட, ஓட விரட்டி வாலிபர் வெட்டிக் கொலை

Published On 2021-10-03 09:56 GMT   |   Update On 2021-10-03 09:56 GMT
திருவள்ளூர் அருகே ஓட, ஓட விரட்டி வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 31). இவர் காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று இரவு வீட்டில் இருந்த முருகனை உடன் வேலை பார்க்கும் நண்பரான அதே பகுதியை சேர்ந்த அப்பு என்கிற சுபாஷ் சந்திரபோஸ் தனியாக அழைத்துச் சென்றார்.

அப்போது அப்புவுக்கும், முருகனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அப்பு மறைத்து வைத்திருந்த அரிவாளால் முருகனை சரமாரியாக வெட்டினார்.

இதில் காயமடைந்த முருகன் உயிர் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் விரட்டி சென்ற அப்பு ஓட. ஓட விரட்டி முருகனை வெட்டினார். இதில் தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அப்பு புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் லில்லி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், மாலா, சுப்பிரமணி ஆகியோர் விரைந்து சென்று முருகனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முருகனுக்கும், அப்புவுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று மாலையும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக முருகன் கொலை செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News