செய்திகள்
உயிரிழப்பு

ரெயிலில் அடிபட்டு வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

Published On 2021-09-29 07:37 GMT   |   Update On 2021-09-29 07:37 GMT
நெல்லையில் ரெயிலில் அடிபட்டு வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை டவுன் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர சட்டம்- ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், டவுன் உதவி கமிஷனர் விஜயகுமார், நெல்லை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை பார்வையிட்டனர்.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் புளூட்டோ வரவழைக்கப்பட்டது. அது பிணம் கிடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு, தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்து கிடந்தவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சோன் சாய் நாக் (வயது 50) என்பதும், அவர் நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், அவர் நேற்று முன்தினம் இரவு டவுன் ரெயில்வே கேட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த பகுதியில் கேரளாவுக்கு சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News