செய்திகள்
கோப்புபடம்

பேரளத்தில் மேலும் ரூ.4¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 4 பேர் கைது

Published On 2021-09-25 13:31 GMT   |   Update On 2021-09-25 13:31 GMT
பேரளத்தில் மேலும் ரூ.4¼ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.
நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் பேரளம் ரெயில்வே கேட் அருகே நேற்று முன்தினம் இரவு பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். இதில் சரக்கு ஆட்டோவில் மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து சரக்கு ஆட்டோவில் வந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள், நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (வயது22), பரணிதரன் (22), கொல்லுமாங்குடியை சேர்ந்த முகமது இப்ராஹிம் (40) என்பதும், இவர்கள் நீடாமங்கலத்தில் இருந்து கொல்லுமாங்குடிக்கு புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 612 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீராம், பரணிதரன், முகமது இப்ராஹிம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

கைதான 3 பேர் கொடுத்த தகவலின் பேரில் நீடாமங்கலத்துக்கு சென்ற போலீசார், அங்கு ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் ரூ.4 லட்சம் 21 ஆயிரம் மதிப்பிலான 600 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த முனியப்பன் (38) என்பவரையும் கைதுசெய்தனர்.

Tags:    

Similar News