செய்திகள்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள் - போலீசாருடன் தள்ளுமுள்ளு
கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் கயிறு கட்டி பகுதி பகுதியாக உள்ளே அனுமதித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வந்தது. கொரோனா தொற்று காரணமாக கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக வருவதை தவிர்க்கும் பொருட்டு கடந்த 26.7.2021 முதல் தொலைபேசி மூலம் குறைகளை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க தொடர்ந்து வந்த வண்ணம் இருந்ததால் கூடுதல் தொலைபேசி எண் அறிவிக்கபட்டது. ஆனால் பொதுமக்கள் அதை ஏற்காமல் திங்கட்கிழமை தோறும் மனு அளிப்பதற்காத கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்.
இந்த நிலையில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நேரடியாக குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் அதிகமாக இருந்ததால் கயிறு கட்டி போலீசார் பகுதி பகுதியாக உள்ளே அனுமதித்தனர்.
அப்போது திடீரென வரிசையில் நின்ற பொதுமக்கள் கூட்டமாக உள்ளே நுழைந்தனர்.போலீசார் தடுக்க முயன்றும் தள்ளி விட்டு உள்ளே சென்றனர். பின்னர் போலீசார் கதவை இழுத்து மூடினர். இதனால் வெளியே நின்றவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.