செய்திகள்
ராமநாதபுரம் நகராட்சியில் 20 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
ராமநாதபுரம் நகராட்சியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வார்டுகளிலும் 20 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
ராமநாதபுரம்:
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை ஒழிக்க நாளை (12-ந்தேதி) தமிழகம் தழுவிய அளவில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் சந்திரகலா உத்தரவின்படி கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் 650 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் ஆணையாளர் பொறுப்பு நிலேஷ்வர் தலைமையில் சுகாதார அலுவலர் ஸ்டேன்லி குமார் மேற்பார்வையில் அனைத்து வார்டுகளிலும் 20 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
நகர்புற ஆரம்ப சுகாதார மையம், புதிய பஸ் நிலையம், ஏ.வி.எம்.எஸ். மேல் நிலைப்பள்ளி, எம்.எஸ்.கே. நகராட்சி பள்ளி, கண்ணகி தெரு வள்ளுவன் பள்ளி, அறிஞர் அண்ணா பள்ளி அங்கன்வாடி மையம், வள்ளல் பாரி பள்ளி, முகவை ஊருணி மேல்கரை அங்கன்வாடி மையம், பெரியார் நகர் ஆர்.ஆர். பூங்கா அங்கன்வாடி மையம், தங்கவேல்சாமி தெரு, காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு, லெட்சுமிபுரம் ஊருணி, இந்திரா நகர், நாகநாதபுரம் கான்சாகிப் தெரு ஆகிய அங்கன்வாடி மையங்கள், அண்ணா நகர் சமுதாய கூடம், வனசங்கரி அம்மன் கோவில் தெரு, காந்தி நகர், பாலசுப்பிரமணியசாமி கோவில் தெரு, தங்கப்பா நகர், முகவை ஊருணி கீழ்கரை ஆகிய அங்கன் வாடி மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது.
இந்த முகாம்களில் இதுவரை ஊசி போடாதவர்கள் மற்றும் 2-வது தவணை ஊசி போட வேண்டியவர்கள் தவறாமல் கலந்துகொண்டு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆணையாளர் நிலேஷ்வர் தெரிவித்து உள்ளார்.