தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 11.72 லட்சம் மடிக்கணினிகள் விரைவில் வழங்கப்படும்- அமைச்சர் தகவல்
சென்னை:
சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் நாகை மாலி, சின்னத்துரை ஆகியோர் கவன ஈர்ப்பை கொண்டு வந்தனர். அதில், 2017-18-ம் ஆண்டு படித்த பிளஸ்-2 மாணவர்களுக்கு மடிக்கணினி இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. அது எப்போது வழங்கப்படும் என்பது பற்றி கேட்டு இருந்தனர்.
இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-
மாணவர்களிடையே கணினி அறிவு திறனை மேம்படுத்தும் வகையில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகின்றன.
2011-12-ம் கல்வி ஆண்டு முதல் இந்த திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.
2011-12 முதல் 2019-20 கல்வி ஆண்டு வரையில் இந்த திட்டத்தின்கீழ் 45.71 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இதற்காக ரூ.6349.63 கோடி செலவிடப்பட்டுள்ளது.
2017-18-ம் கல்வி ஆண்டு 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களில் சென்னை, கோவை, ஈரோடு, காஞ்சீபுரம், மதுரை, பெரம்பலூர், சேலம், தேனி ஆகிய 8 மாவட்டங்களில் விலையில்லா மடிக்கணினி மாணவர்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
2020-21-ம் கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு பயின்ற 4 லட்சத்து 97 ஆயிரத்து 28 மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மடிக்கணினிகள் இன்னும் வழங்கப்படவில்லை.
தற்போது 2021-22-ம் கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு படித்து சுமார் 5 லட்சம் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்பட வேண்டி உள்ளது.
2017-18-ம் கல்வி ஆண்டில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 789 மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டி உள்ளது.
இதன்படி மொத்தமாக 11 லட்சத்து 72 ஆயிரத்து 817 மடிக்கணினிகள் வழங்க வேண்டியது இருக்கிறது. நிலுவையில் இருக்கும் இந்த பணிகளை முடிப்பதற்கு நிர்வாகம் அனுமதி வழங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.
படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் அரசாணையில் தெரிவித்துள்ளபடி மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் 3-வதாக பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டுமா?: மா.சுப்பிரமணியன் விளக்கம்