செய்திகள்
திருவாரூர் விளமல் பகுதியில் மதுக்கடைகளை மூட வேண்டும் - கலெக்டருக்கு மனு
திருவாரூர் விளமல் பகுதியில் மதுக்கடைகளை மூட வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான், மக்கள் அதிகாரம் மாவட்ட அமைப்பாளர் முரளி மற்றும் பலர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் விளமல் பகுதியில் மன்னார்குடிக்கு செல்லும் சாலையில் 2 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த பகுதியில் கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், முதன்மை கல்வி அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.
மேலும் புதிய பஸ் நிலையமும் அருகில் உள்ளது. திருவாரூர்- மன்னார்குடி சாலை, தஞ்சை- நாகை சாலை, திருவாரூர்-கும்பகோணம் சாலை என அனைத்து சாலைகளையும் இணைக்கின்ற முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. குறிப்பாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக செல்லும் 108 ஆம்புன்ஸ்கள் எந்த நேரமும் செல்கின்ற பகுதியாகவும் உள்ளது. இதனால் எந்த நேரமும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. இந்த பிரதான சாலையில் உள்ள 2 டாஸ்மாக் மதுக்கடைகளிலும் எப்போதும் மதுபிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. அவர்களுடைய வாகனங்கள் அங்கு நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த 2 டாஸ்மாக் மதுகடைகளையும் மூட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.