செய்திகள்
நீதிமன்றத்தின் அவகாசம் முடிவு எதிரொலி: ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய தண்ணீர் நிறுத்தம்
நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை அதிகரித்ததால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
சுற்றுச்சூழல் மாசு காரணமாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இதற்கிடையே 2-வது கட்ட கொரோனா அலையில் இந்தியா திக்குமுக்காடி கொண்டிருந்தது. 2-வது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்பட்டது. இதனால் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மூன்று மாத காலத்திற்கு, அதாவது ஜூலை 31-ந்தேதி வரை ஆலையை திறக்க அனுமதி கொடுத்தது. அதன்பின் ஆக்சிஜன் தேவையைப் பொறுத்து, நீட்டிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் இன்று காலை ஆலைக்கு வழங்குவதற்கான தண்ணீரை அரசு நிறுத்தியுள்ளது.