செய்திகள்
தமிழக அரசு

புதிய ரேசன் கார்டுதாரர்கள் 3 லட்சம் பேர் ஆகஸ்டு மாதம் முதல் பொருட்கள் பெறலாம்- தமிழக அரசு

Published On 2021-07-25 08:54 GMT   |   Update On 2021-07-25 08:54 GMT
நிவாரணத்தொகை மற்றும் மளிகைப்பொருட்கள் தொகுப்பினை பெறாதோர் 31.07.2021க்குள் அவர்களுக்குரிய பொது விநியோகத்திட்ட அங்காடிகளில் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மே 15-ந்தேதி முதல், முதல் தவணையாக ரூ.2000 மற்றும் ஜூன் 15-ந்தேதி முதல் ரூ.2000 ஆக மொத்தம் ரூ.4000 உதவித்தொகை, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், இக்குடும்பங்களுக்கு முழு ஊரடங்கின்போது தேவைப்படும் மளிகைப் பொருட்கள் வழங்கிடும் பொருட்டு 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையினை ஜூன் 15ஆம் தேதி முதல் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.



99 சதவீதத்திற்கும் மேலாக அட்டைதாரர்கள் தற்பொழுது நிவாரணத்தொகை மற்றும் மளிகைப்பொருட்கள் தொகுப்பினைப் பெற்றுள்ள நிலையில், இதுவரை பெறாதோர் 31.07.2021க்குள் அவர்களுக்குரிய பொது விநியோகத்திட்ட அங்காடிகளில் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொரோனா பாதிப்பு மற்றும் இதர காரணங்களால் 31.07.2021க்குள் பெற இயலாத, 15.06.2021 அன்றைய தேதியில் தகுதியுடன் இருந்த, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 01.08.2021 முதல் மாவட்ட வழங்கல் அலுவலர் நிலையிலான அலுவலரிடம் நியாய விலைக் கடை மூலமாகத் தகவல் தெரிவித்து அனுமதி பெற்று அதன்பின் அவர்களுக்கு உரிய நியாய விலைக்கடையிலிருந்தே வழங்கும் முறை பின்பற்றப்படும்.

நிகழும் 2021-ம் ஆண்டு மே 10 முதல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த ஏறக்குறைய மூன்று லட்சம் மனுதாரர்களுக்குக் குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இக்குடும்ப அட்டைதாரர்கள் 01.08.2021 முதல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் ரேசன் பொருட்களைத் தொடர்ந்து பெற வழிவகை செய்யத் தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆதலால், புதிய குடும்ப அட்டைதாரர்கள் 2021 ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து இன்றியமையாப் பொருட்களைத் தங்கு தடையின்றிப் பெற்றுக்கொள்ளலாம்.

அட்டைதாரர்கள் அனைவரும் கொரோனா
நோய்த்தொற்று தீரும் வரை முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியினைப் பின்பற்றி, அவசியத் தேவையின்றி பொது வெளிக்கு வராமல் தங்களையும் காத்து சமூகத்தினையும் காத்து கொரோனா தொற்றினை வென்றிடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News