செய்திகள்
அபராதம்

தொப்பூர் மலைப்பாதையில் விதியை மீறிய 1,014 வாகனங்களுக்கு அபராதம்

Published On 2021-07-11 12:51 GMT   |   Update On 2021-07-11 12:51 GMT
தொப்பூர் மலைப்பாதையில் விதியை மீறிய 1,014 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி:

தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. தொப்பூர் மலைப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பு 30 கி.மீ. ஆகும்.

இந்த பகுதியில் விபத்துகளை குறைக்க வட்டார போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை இணைந்து தொடர் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வேக வரம்பை மீறுகின்ற வாகனங்களை ரேடார் கருவி மூலம் கண்டறிந்து இ-செலான் மூலம் அபராதம் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ரேடார் கருவி மூலம் வாகனத்தின் புகைப்படத்துடன் வாகனம் வந்த வேகம் குறிக்கப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன்படி கடந்த 7-ந்தேதி வரை 1,014 வாகனங்களுக்கு ரூ.4 லட்சத்து 5 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் திவ்யதர்சினி கூறுகையில், தொப்பூர் மலைப்பாதையில் வாகனத்திற்கான வேக விதியை மீறியவர்கள் உரிய அபராதத்தை செலுத்தினால் மட்டுமே வாகனங்களுக்கு வரி செலுத்துதல், தகுதிச்சான்று, காப்பு சான்று புதுப்பித்தல், உரிமை மாற்றம், தவணை கொள்முதல் உடன்படிக்கை உள்ளிட்ட அனைத்து பணிகளை மேற்கொள்ள முடியும். எனவே தொப்பூர் மலைப்பாதையில் டிரைவர்கள் 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News