ஆறுமுகநேரி அருகே லாரி கிளீனர் மர்ம மரணம்
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பா (வயது45). லாரி கிளீனர்.
இவரது மனைவி சுப்புத்தாய் (36). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சாகுபுரம் தொழிற்சாலைக்கு செல்லும் தனியார் லாரியில் செல்லப்பா கிளீனராக வேலைக்கு செல்வது வழக்கம்.
நேற்று காலையிலும் அவர் அங்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது ஆலையின் நுழைவு வாயிலில் நடத்தப்பட்ட சோதனையில் செல்லப்பா மது அருந்தி இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவரை வேலைக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த லாரியின் டிரைவரான முருகேசன் என்பவர் வேலை முடிந்து மாலையில் திரும்பி வந்தபோது செல்லப்பாவை தேடி உள்ளார்.
அப்போது சாகுபுரத்திலிருந்து கொட்டமடைக் காட்டிற்கு செல்லும் உப்பள சாலையில் செல்லப்பா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். செல்லப்பாவின் முகம் மற்றும் முதுகில் ரத்த காயங்கள் இருந்துள்ளன.
இதுபற்றிய தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் அங்கு விரைந்து வந்து செல்லப்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லப்பா விபத்தின் காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.