செய்திகள்
டிடிவி தினகரன்

மேகதாது அணை கட்டுவதை தடுக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்- டி.டி.வி.தினகரன்

Published On 2021-07-06 07:56 GMT   |   Update On 2021-07-06 07:56 GMT
தமிழக அரசு கடிதம் மட்டும் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகதாது அணை பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

மேகதாது பகுதியில் அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அப்படி ஓர் அணை உருவானால் ஒட்டு மொத்த தமிழகமும் பெரும் பாதிப்புக்கு ஆளாகும்.

எனவே தமிழக அரசு கடிதம் மட்டும் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகதாது அணை பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். நீதிமன்றத்தின் வழியாகவும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இதே போல் வட மாவட்டங்களின் பாசன ஆதாரமான தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய ஆற்றின் குறுக்கே ஊரடங்கு காலத்தில் கர்நாடகா புதிய அணையைக் கட்டி இருப்பது குறித்தும் இதற்காக கடந்த ஆட்சியில் தமிழகத்தில் இருந்து கட்டுமான பொருட்கள் அனுப்பியதாக வெளியாகி உள்ள செய்திகள் பற்றியும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

Tags:    

Similar News