திருவட்டாரில் ஒய்வு பெற்ற ஆசிரியையிடம் 7½ பவுன் நகை பறிப்பு
திருவட்டார்:
திருவட்டார் அருகே செங்கோடி பகுதியில் வசித்து வருபவர் செல்வன் பாக்கிய ராஜ். இவரது மனைவி விமலா (வயது72). ஒய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்.
செல்வன் பாக்கியராஜ் நேற்று மாலை கடைக்கு சென்றிருந்தார். விமலா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். செல்போனில் வீட்டின் பின் பக்கம் இருந்து மகளிடம் பேசி கொண்டு இருந்தார்.
வீட்டின் பின் பக்கம் உள்ள ரப்பர் தோட்டத்திற்குள் மறைந்திருந்த மர்ம நபர் விமலா கழுத்தில் இருந்த 7½ பவுன் தங்க செயினை பறித்து கொண்டு ரப்பர் தோட்டம் வழியாக தப்பி சென்று விட்டார்.
விமலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அதற்குள் மர்ம நபர் தப்பி ஓடி விட்டான். இதுகுறித்து திருவட்டார் போலீசில் விமலா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.