சிங்காநல்லூரில் அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் மாடியில் இருந்து தவறி விழுந்து பலி
சிங்காநல்லூர்:
கோவை உப்பிலிபாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராம்குமார் (வயது 61) டாக்டர். இவரது மனைவி வத்சலாதேவி (56). இவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். வத்சலாதேவி கடந்த சில மாதங்களாக உடல்நிலை செரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். இந்தநிலையில் வத்சலாதேவி நேற்று துவைத்த துணிகளை காயப்போடுவதற்காக மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு துணிகளை காயப்போட்ட போது திடீரென எதிர்பாராதவிதமாக அவர் 6-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் அவர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.