செய்திகள்
கேரள முதல்-மந்திரியாக பதவியேற்ற பினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து
திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கேரள முதல்-மந்திரியாக 2வது முறையாக பினராயி விஜயன் பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை:
கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் புதிதாக பதவி ஏற்க இருக்கும் மந்திரிகளுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கேரள முதல்-மந்திரியாக 2வது முறையாக பினராயி விஜயன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து பினராயி விஜயன் தலைமையில் அமையும் புதிய மந்திரி சபையில் உள்ள 21 மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், கேரள முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள பினராயி விஜயனுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
கேரள முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள என் சகோதரர் பினராயி விஜயனுக்கு வாழ்த்துக்கள். பினராயி விஜயனின் உறுதியும் விடாமுயற்சியும், சமூக சமத்துவம், அமைதி போன்றவை கேரள மக்களின் செழிப்புக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன். என்று தெரிவித்துள்ளார்.