செய்திகள்
புதிய கட்டுப்பாடுகளால் தென்காசியில் கடைகள் அடைப்பு
புதிய கட்டுப்பாடுகளால் தென்காசியில் பகல் 12 மணிக்கு பிறகு கடைகள் அடைக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தென்காசி:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு மேலும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை நேற்று முதல் அமல்படுத்த உத்தரவிட்டது. அதன்படி, மளிகை, காய்கறி கடைகளை பகல் 12 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென்காசியில் நேற்று பகல் 12 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி கடைகள் இயங்கின. இதனால் பொதுமக்கள் காலையிலேயே தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர்.
ஓட்டல்கள் திறந்து இருந்தன. அங்கு பொதுமக்களுக்கு பார்சல்களில் மட்டும் உணவு வழங்கப்பட்டது. மருந்து கடைகளும் திறந்து இருந்தன. இவற்றை தவிர மற்ற கடைகள் அனைத்தும் பகல் 12 மணிக்கு பிறகு அடைக்கப்பட்டன. இதனால் ரத வீதிகள், பஜார், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் சாலைகளும் வெறிச்சோடின.
தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் மிகவும் குறைவான பயணிகளே பயணம் செய்தனர்.
போதிய பயணிகள் வராததால் டிரைவர் மற்றும் கண்டக்டர் அங்கு வெகுநேரமாக காத்து நின்றதை பார்க்க முடிந்தது. பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கின. வங்கிகள் மதியம் 2 மணி வரை இயங்கின. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று முடங்கியது.