செய்திகள்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா பரவல் 2 நாட்களில் சற்று குறைந்துள்ளது- ராதாகிருஷ்ணன் தகவல்

Published On 2021-04-27 08:13 GMT   |   Update On 2021-04-27 08:13 GMT
கடந்த 2 நாளில் கொரோனா பரவல் சதவீதம் குறைந்து இருப்பதால் நாம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. கட்டுப்பாடுகளை பின்பற்றினால் இனி கொரோனாவை இறங்கு முகத்துக்கு கொண்டுவர முடியும்.
சென்னை:

தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் இன்று ஸ்கிரீனிங் மையத்தில் ஆய்வு செய்தோம். இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா பரவும் வேகம் சற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த இது ஒரு நல்ல அறிகுறி. ஆனால் இதையே நாம் நம்பிக்கொண்டு இருக்க கூடாது. 2 நாட்களிலேயே பரவல் வேகம் குறைந்துள்ளதால் மக்கள் முககவசம் அணிவது, பொது இடங்களுக்கு செல்லாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினால் மிகவும் அது பயனுள்ளதாக இருக்கும்.

பொதுமக்கள் அடுத்த சில நாட்களில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். இந்த நேரத்தில் கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

கொரோனாவால் இந்திய அளவில் திணறக்கூடிய நிலையை பார்க்கும்போது தமிழ்நாட்டில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மகாராஷ்டிராவை விட 5-ல் ஒரு பங்கு பாதிப்பு தான் இங்கு உள்ளது. ஆந்திரா, கர்நாடகாவை விட பாதி அளவு பாதிப்பு தான் இங்கு உள்ளது என்று பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறான கருத்து.

ஒருநாளில் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் நிலையில் 30 சதவீதம் பேர் மருத்துவமனைக்கு வருகிறார்கள். சென்னை மாநகராட்சி சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்வதற்காக 200 ஆட்டோக்களை இயக்கி வருகிறோம். நோய் உறுதியானவர்களை 100 வாகனங்கள் மூலம் சென்னையில் உள்ள 12 ஸ்கிரீனிங் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.

அவர்கள் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனை செய்து எந்த அளவு பாதிப்பு இருக்கிறது என்று கண்டறிகிறார்கள். சாதாரண பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர வேண்டாம் என்று அறிவுறுத்தி சிகிச்சை பெற ஏற்பாடுசெய்கிறார்கள்.

இந்த ஸ்கிரீனிங் சென்டரை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 2 நாளில் பரவல் சதவீதம் குறைந்து இருப்பதால் நாம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. கட்டுப்பாடுகளை பின்பற்றினால் இனி கொரோனாவை இறங்கு முகத்துக்கு கொண்டுவர முடியும்.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் இருப்பவர்கள் வெளியே வரவும், அந்த பகுதிக்குள் பொதுமக்கள் செல்லவும் தடை விதித்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.



தமிழகத்தில் கூடுதலாக 12 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி முடிவு எடுத்துள்ளார். இந்த வார இறுதிக்குள் 2 ஆயிரம் படுக்கைகள் தயாராகிவிடும். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மட்டுமின்றி இதர மருத்துவமனைகளையும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.

மேலும் சேலம், கோவை, மதுரை, திருச்சி போன்ற மருத்துவமனைகளிலும் படுக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சென்னை அரசு மருத்துவமனைகளில் 12 ஆயிரத்து 31 படுக்கைகளிலும், கோவிட் மருத்துவமனைகள், கோவிட் கண்காணிப்பு மையங்கள் ஆகியவற்றில் 7,742 படுக்கைகளிலும் நோயாளிகள் உள்ளனர். 3,570 படுக்கைகள் காலியாக உள்ளன.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக அரசு மருத்துவமனைகளுக்கு வந்துவிடுவதால் படுக்கை இல்லாத சூழ்நிலை செயற்கையாக உருவாகிவிடுகிறது. அதனால் தான் அவர்களை ஸ்கிரீனிங் சென்டர்களுக்கு வருமாறு கூறுகிறோம். இதற்காக காலையிலேயே ஸ்கிரீனிங் சென்டர்களை திறந்துவிடுகிறோம். இங்கு வருபவர்களுக்கு அதிக பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்த்துவிடுகிறோம்.

தடுப்பூசி வீணாகிறது என்று சொல்கிறார்கள். தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று மக்களிடம் கூவி கூவி சொன்னோம். அப்போது நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேர் தான் போட்டனர். 2 நாட்கள் மட்டுமே 2 லட்சம் பேர் போட்டனர். சில நாட்கள் 10 ஆயிரத்துக்கும் கீழ் உள்ளவர்கள் தான் போட்ட னர். நேற்று 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் போட்டனர்.

கடைசியாக 10 பேர் வரும்போது அவர்களை திருப்பி அனுப்பமுடியாது. எனவே கடைசி குப்பியில் கொஞ்சம் தடுப்பூசி வீணாகிறது. இதை தடுப்பூசியை வீணாக்குவதாக பெரிதுபடுத்துகிறார்கள். இப்படி வீணாவதையும் 5 சதவீதத்துக்கு கீழ் குறைத்துள்ளோம். அனைவருக்கும் தடுப்பூசி போடும்போது தடுப்பூசி வீணாவதை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வந்து விடுவோம்.

பொதுமக்கள் அடுத்த ஒரு வாரம் முறையாக தங்களை அர்ப்பணித்து கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். ரெம்டெசிவிர் மருந்தை பலர் வெளி மாநிலத்தில் இருந்து வாங்கி தமிழகத்தில் கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்க கீழ்ப் பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்கிறோம். இனி ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் இடங்களை அதிகப்படுத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News