செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூர் அருகே சரக்கு வேன் தீப்பிடித்து ரூ.5 லட்சம் தேங்காய் பருப்புகள் சேதம்

Published On 2021-04-23 06:25 GMT   |   Update On 2021-04-23 11:59 GMT
திருப்பூர் அருகே சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தேங்காய் பருப்புகள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வெள்ளகோவில்:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து தேங்காய் பருப்புகளை ஏற்றி கொண்டு காங்கயம் நோக்கி நேற்றிரவு ஒரு சரக்கு வேன் புறப்பட்டது. குமார் என்பவர் வேனை ஓட்டினார். கிளீனராக அருண் பாண்டி இருந்தார்.

வெள்ளகோவில் அருகே கரட்டுப்பாளையம் பகுதியில் வரும் போது வேனின் பின்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதை கவனித்த குமார் உடனே வேனை நிறுத்தினார். மேலும் 2 பேரும் உடனடியாக வேனில் இருந்து இறங்கினர். அதன் பிறகு வேன் முற்றிலும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. சாதுர்யமாக செயல்பட்டதால் குமாரும், அருண்பாண்டியும் உயிர் தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி தனசேகர் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் வேன் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. அதில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 4 டன் தேங்காய் பருப்பும் நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News