கடையம் அருகே கொரோனாவுக்கு வியாபாரி பலி
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள திருமலையப்பபுரத்தை சேர்ந்தவர் 66 வயது முதியவர். இவர் கடந்த மாதம் வியாபார ரீதியாக ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று விட்டு கடந்த 1-ந்தேதி சொந்த ஊருக்கு திரும்பினார்.
இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
கடந்த 7-ந்தேதி முதியவர் தென்காசி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு முதியவர் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே அவருடன் தொடர்பில் இருந்த அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு எடுத்த கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கும் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவர்கள் தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது.