செய்திகள்
தாராபுரம் அருகே தொழிலாளியை கொலை செய்த நண்பர் கைது
தாராபுரம் அருகே மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கொலை செய்த நண்பர் கைது செய்யப்பட்டார்.
குண்டடம்:
தாராபுரத்தை அடுத்த காங்கேயம்பாளையத்தை சேர்ந்தவர் ஜான்வெஸ்லி (வயது 58). இவர் தாராபுரம் தாலுகா அலுவலகம் பகுதியில் பொதுமக்களுக்கு மனு எழுதிகொடுக்கும் தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று ஜான்வெஸ்லியும், அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் சங்கிலியும் சந்திராபுரத்தில் உள்ள மதுக்கடை பாரில் மது குடித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஜான்வெஸ்லியை சங்கிலி தாக்கி உள்ளார்.
இதில் ஜான்வெஸ்லி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சங்கிலியை தேடி வந்தனர். இந்த நிலையில் அமராவதி ஆற்று பாலம் அருகே சங்கிலி பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சங்கிலியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.