செய்திகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 ரவுடிகள் கைது
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இது தவிர குற்றவிசாரணை நடைமுறைச் சட்டப்படி 1523 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தேர்தலின் போது பிரச்சனையில் ஈடுபடக்கூடியவர்கள் என 313 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 27 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். நேற்று மேலும் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு அரிவாள், 2 கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.