குளிக்க சென்றபோது பழவூர் அணைக்கட்டில் தவறிவிழுந்து தொழிலாளி பலி
சேரன்மகாதேவி:
மதுரை சோனியா நகரை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 58), கட்டிட தொழிலாளி. இவர் நெல்லை மாவட்டம் கரிசூழ்ந்தமங்கலம் பகுதியில் உள்ள தனது உறவினர் இல்ல கிரகபிரவேச நிகழ்ச்சிக்காக வந்தார்.
நேற்று மாலை அவர் பழவூர் அணைக்கட்டிற்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்து தண்ணீரில் மூழ்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அதிகாரி வரதராஜன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று இரவு வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இன்று 2-வது நாளாக தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப் போது பாஸ்கர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.