செய்திகள்
சக்திமுருகன்

ஜோலார்பேட்டை அருகே காதல் மனைவி பேசாததால் தொழிலாளி தற்கொலை

Published On 2021-03-20 11:01 GMT   |   Update On 2021-03-20 11:01 GMT
காதல் மனைவி பேசாததால் அவர் தங்கியிருந்த வீட்டின் முன்பு தொழிலாளி விஷம் குடித்து மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த சந்திரபுரம் செட்டி பட்டறை பகுதியை சேர்ந்தவர் சக்தி முருகன் (வயது 28). இவர் கோவையில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடன் வண்ணார் வட்டத்தை சேர்ந்த சாமுவேல் என்பவரும் மேஸ்திரியாக வேலைபார்த்து வருகிறார்.

அப்போது சாமுவேலின் மகளான சந்தியா (20) அறிமுகமானதால் சக்தி முருகன் அவரை காதலிக்க தொடங்கினார். இருவரும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு கோவையில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த பெண்ணின் வீட்டார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தியாவை அவரது தாய்மாமனுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி தாய் சுமதி ஏலகிரி கிராமம் பகுதியில் உள்ள தனது தங்கை சுமதி வீட்டில் சந்தியாவை தங்க வைத்துள்ளார்.

இந்நிலையில் கோவையில் வேலை செய்துகொண்டிருந்த சக்தி முருகன் கடந்த 5 நாட்களாக சந்தியாவிற்கு போன் செய்துள்ளார். ஆனால் போனை அவர் எடுக்கவில்லை.

காதல் மனைவி பேசாததால் நேற்று முன்தினம் இரவு கோவையிலிருந்து ஜோலார்பேட்டைக்கு சக்திமுருகன் திரும்பினார். பின்னர் சந்தியா தங்கியிருந்த ஏலகிரி கிராமத்துக்கு வந்தார்.

அங்கு சக்தி முருகன் தனது காதல் மனைவியிடம் பேச முயன்றார் ஆனால் சந்தியா பேசவில்லை. தன்னுடன் பேசாமல் வீட்டில் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மன விரக்தி அடைந்த சக்தி முருகன் அந்த வீட்டின் முன்பே விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த சக்தி முருகனின் குடும்பத்தார் அங்கு சென்று மயங்கிய நிலையில் இருந்தவரை மீட்டு அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே சக்தி முருகன் இறந்து விட்டார்.

இந்த நிலையில் தாய் மின்னல் கொடி தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து சக்திமுருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News