செய்திகள்
ஸ்ரீதேவி

ராமநாதபுரம் அருகே கார் கவிழ்ந்து திருச்சி பேராசிரியை பலி

Published On 2021-03-13 19:04 GMT   |   Update On 2021-03-13 19:04 GMT
ராமநாதபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் திருச்சியை சேர்ந்த கல்லூரி பேராசிரியை பலியானார். காரில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராமநாதபுரம்:

புதுக்கோட்டை மாவட்டம் அழகர் நகர் பகுதியை சேர்ந்த சிலர் காரில் ராமநாதபுரம் நோக்கி வந்தனர். இவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே தொண்டி கிழக்குகடற்கரை சாலை பகுதியில் கடலூர் பஸ்நிறுத்தம் பகுதியில் ஒரு பாலத்தின் அருகில் வந்தபோது கார் நிலைதடுமாறி கவிழ்ந்து உருண்டது.

இதில் காரில் பயணம் செய்த கோவிந்தசாமி (வயது75), இவரின் மனைவி அருந்ததி, மகள்கள் கவிபாரதி, தன்சிகா, மருமகள் ஸ்ரீதேவி, காரை ஓட்டிவந்த கோபிநாத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஸ்ரீதேவி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.

இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருவது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்ற அனைவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோவிந்தசாமி அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பாலைக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News