செய்திகள்
தற்கொலை

நாகர்கோவில் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-03-12 21:37 GMT   |   Update On 2021-03-12 21:37 GMT
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலகிருஷ்ணன்புதூர்:

நாகர்கோவிலை அடுத்த பறக்கை சி.டி.எம். புரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 46), தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர் நாகர்கோவிலில் உள்ள செல்போன் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மோகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன், மனைவி இடையே தகராறு நடந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் ஜெயலட்சுமி வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் இரவு வீடு திரும்பிய போது வீட்டில் உள்ள அறையில் மோகன் தூக்கில் தொங்கினார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி அலறினார்.

அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மோகனை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News