செய்திகள்
விபத்து

நொய்யல் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பலி

Published On 2021-03-08 10:43 GMT   |   Update On 2021-03-08 10:43 GMT
நொய்யல் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
நொய்யல்:

கரூர் மாவட்டம், புகளூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அகிலன் (வயது 46). டிரைவர். இந்நிலையில் நேற்று முன்தினம் பரமத்தி வேலூருக்கு பொருட்கள் வாங்கி வருவதற்காக அகிலன் தனது நண்பர் ஒருவரது மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அகிலன் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அகிலனை மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அகிலனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து அகிலனின் மனைவி சுதா வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அகிலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News