செய்திகள்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 178 பேருக்கு கொரோனா தடுப்பூசி
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு மையத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு மையம் அமைக்கப்பட்டு கடந்த 1-ந்தேதி முதல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் விருப்பம் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். அதன்படி இன்று வரை தேர்தல் பணியில் ஈடுபடும் நெல்லை கலெக்டர் அலுவலக ஊழியர்கள், தாலுகா ஊழியர்கள் உள்பட 110 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.
மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் என 68 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மொத்தம் 178 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். விருப்பமுள்ளவர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.