கருமத்தம்பட்டி அருகே uமில்தொழிலாளி கொலை: கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு
கருமத்தம்பட்டி:
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ளது ராமாச்சியம்பாளையம். இங்குள்ள டாஸ்மாக் கடை அருகே கடந்த 25-ந்தேதி அதிகாலை 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் 5 இடங்களில் கத்தியால் குத்தியும், 2 இடங்களில் அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையான வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணையில் கொலையான வாலிபர் பல்லடம் சுத்தம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 42) என்பதும், இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பதும் தெரியவந்தது.
கொலையான 3 நாட்களுக்கு முன்பு தான் இந்த பகுதியில் விசைத்தறி கூடத்தில் வேலைக்கு வந்திருந்தார். வேலைக்கு வந்த 3-வது நாளில் அவரை யார் கொலை செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்லடம், கோவை உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.