செய்திகள்
கோப்புபடம்

நெல்லை அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்தவர் கைது

Published On 2021-02-15 14:10 GMT   |   Update On 2021-02-15 14:10 GMT
நெல்லை அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்த மறுகால்தலை பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 52). இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், பாப்பாத்தி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். இதுகுறித்து அவர் சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (39) என்பவர் தங்கச்சங்கிலி பறித்துச் சென்றது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.67 ஆயிரம் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

நாங்குநேரியில் நேற்று முன்தினம் இரவு கோவில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் திருவிழா பார்க்க வந்திருந்தனர். இதில் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சங்கரன் மனைவி சுப்புலட்சுமியும் திருவிழா பார்க்க வந்திருந்தார். பின்னர் வீட்டிற்கு திரும்பியதும் தனது கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க தாலிச்சங்கிலி மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கூட்ட நெரிசலில் சுப்புலட்சுமி அணிந்து இருந்த தங்க சங்கிலி தவறி விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News