செய்திகள்
திருச்செந்தூரில், வீடு முன்பு கோலம் போட்ட பெண்ணிடம் 12 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
திருச்செந்தூரில் வீடு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 12 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பி.டி.ஆர். நகரை சேர்ந்தவர் நாச்சியப்பன். இவரது மனைவி வசந்தா தேவி (வயது 58). இவர் நேற்று காலையில் வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக நடந்து வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் வசந்தாதேவியின் கழுத்தில் கிடந்த 12 பவுன் தங்க தாலியுடன் கூடிய சங்கிலியை பறித்துள்ளார். அப்போது வசந்தா தேவி தடுத்துள்ளார். ஆனால் வசந்தா தேவியை கீழே தள்ளிவிட்டு தங்க சங்கிலியை பறித்து கொண்டு மர்மநபர் ஓடினார்.
அவரது பின்னால் திருடன்...திருடன் என்று கத்தியவாறு ஓடினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரீஷ் சிங் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் மேரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.