தமிழ்நாடு

கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது

Published On 2024-05-07 03:01 GMT   |   Update On 2024-05-07 03:01 GMT
  • முதல் நாளான நேற்று இரவு 8 மணி வரை 15 ஆயிரத்து 945 வாகனங்கள் வெவ்வேறு தேதிகளில் கொடைக்கானலுக்கு வருவதற்காக விண்ணப்பிக்கப்பட்டது.
  • கொடைக்கானலுக்கு இன்று மட்டும் வருவதற்கு 3 ஆயிரத்து 792 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல்:

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் கோடைகாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து விடுகின்றனர். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பயணிகள் வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30.06.2024 வரை இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் 'epass.tnega.org' என்ற இணையதளத்தின் மூலம் நேற்று முதல் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், முதல் நாளான நேற்று இரவு 8 மணி வரை 15 ஆயிரத்து 945 வாகனங்கள் வெவ்வேறு தேதிகளில் கொடைக்கானலுக்கு வருவதற்காக விண்ணப்பிக்கப்பட்டது. அந்த வாகனங்கள் அனைத்துக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டது. இதன்மூலம் 3 லட்சத்து 61 ஆயிரத்து 919 பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளனர். இதில் கொடைக்கானலுக்கு இன்று மட்டும் வருவதற்கு 3 ஆயிரத்து 792 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. அதன்மூலம் 28 ஆயிரத்து 168 சுற்றுலா பயணிகள் வருகை தர இருக்கின்றனர்.

இந்நிலையில், கொடைக்கானலுக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வாகனங்கள் அனைத்தும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

Tags:    

Similar News