வடுகம்முத்தம்பட்டி அருகே குறி சொல்லி வந்த வாலிபர் அடித்துக் கொலை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த வடுகம்முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சீனிவாசன் (வயது 35).
அதே பகுதியில் டேங்க் ஆப்ரேட்டராகவும் எலக்ட்ரீசியனாகவும் வேலை பார்த்து வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே அவருக்கு சொந்தமான நிலத்தில் குடிசை போட்டு குறி சொல்லி வந்தார்.
அமாவாசையையொட்டி நேற்று இரவு குறி கேட்க ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களுக்கு குறி சொல்லி விட்டு சீனிவாசன் அங்கேயே தங்கினார்.
இந்த நிலையில் இன்று காலை சீனிவாசன் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரை மர்ம கும்பல் அடித்து கொலை செய்துள்ளனர். இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
சீனிவாசனை எதற்காக கொலை செய்தார்கள்? யார் கொலை செய்தனர்? முன்விரோதமா? என குரிசிலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.