செய்திகள்
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை- அமைச்சர் தங்கமணி பேட்டி
கொரோனாவின் தாக்கம் குறைந்து மின்சார தேவை அதிகரித்து இருந்தாலும் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்:
நாமக்கல்லில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் வந்தாலும், கோடைக்காலம், மழைக்காலம் உள்பட எந்த காலத்திலும் தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளதால் தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுகிறது. கொரோனா கால பாதிப்புகள் குறைந்து, தற்போது மின் தேவைகள் அதிகரித்து இருந்தாலும், மின் உற்பத்தி திருப்திகரமாக உள்ளதால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை.
விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பது குறித்து, 4 மாவட்ட விவசாயிகளிடம் ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. விருதுநகர்-கோவை பாதையில் உயர் மின் கோபுரம் அமைப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அதை நிறுத்தி வைக்க வேண்டும் என விவசாயிகள் பேச்சுவார்த்தையின் போது கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் மற்றொரு கோரிக்கையாக மத்திய அரசு அளிப்பது போன்று இழப்பீடு, மாநிலத்தில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கேட்டு உள்ளனர். இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என சொல்லி உள்ளேன்.