செய்திகள்
தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள நெடுஞ்சாலை பகுதியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரிகள் நிறுத்தப்படும் இடம் அருகே நின்றுகொண்டிருந்த சிலர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். அப்போது பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி (வயது 33), பிடமனேரி பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் ஆகியோர் போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது நெடுஞ்சாலை பகுதியில் தனியாக வருபவர்களை வழிமறித்து அவர்களிடம் இருக்கும் பணத்தை வழிப்பறி செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். வழிப்பறி கும்பலைச் சேர்ந்த மேலும் 3 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.