செய்திகள்
உண்ணாவிரதம் நடைபெற்ற காட்சி.

கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஊராட்சி தலைவர் உண்ணாவிரதம்

Published On 2021-01-27 06:42 GMT   |   Update On 2021-01-27 06:42 GMT
வலங்கைமான் அருகே கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஊராட்சி தலைவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் குத்தாலம் பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அபய வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்தநிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு எதிர்ப்புறமாக ஆலங்குடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் குமார் என்பவரது வீடு உள்ளது. இவர் நேற்று மதியம் அவரது வீட்டிற்கு பின்புறமாக கான்கிரீட் காம்பவுண்டு சுவர் அமைப்பதற்கான தூண் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி ஊராட்சி தலைவர் மோகன் அப்பகுதிக்கு விரைந்து வந்து சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி உடனடியாக இது குறித்து வருவாய் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆலங்குடி கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அவருடன் அரசியல் கட்சியினரும் உண்ணாவிரதம் இருந்தனர்.

அப்போது வருவாய் துறை ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஊராட்சி தலைவர் மோகன், சுவர் அமைக்கப்படும் இடம் அபய வரதராஜர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம் என்றும், . கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் என கூறினார்.

அப்போது பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து ஊராட்சி தலைவர் உண்ணாவிரதத்ைத கைவிட்டார். உண்ணாவிரத போராட்டத்தில் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர்கள் ஞானசேகரன், கோபால், ஒன்றிய இளைஞரணி செயலாளர் மூர்த்தி, ஊராட்சி துணை தலைவர் ராசாத்தி, பா.ம.க. ஒன்றிய பிரதிநிதி ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News