செய்திகள்
தீவிபத்தில் பெயிண்டு கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகி கிடப்பதை காணலாம்.

பெரியகுளத்தில் பெயிண்டு கடையில் தீவிபத்து- ரூ.80 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

Published On 2021-01-19 09:54 GMT   |   Update On 2021-01-19 09:54 GMT
பெரியகுளத்தில் உள்ள பெயிண்டு கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த ரூ.80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவருக்கு சொந்தமான பெயிண்டு மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை அப்பகுதியில் உள்ளது. ஜீவானந்தம் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதற்கிடையே இரவு 11 மணி அளவில் அவரது கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தென்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் கடையில் எரிந்த தீ மேலும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் தீயணைப்புத்துறையினர், 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், பெயிண்டு கடையில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் இருந்து மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது.

அப்போது 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படைவீரர்களை கொண்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து சுமார் 4 மணி நேரம் போராடி பெயிண்டு கடையில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு படைவீரர்கள் அணைத்தனர்.

இந்த தீவிபத்தால் கடையில் இருந்த ரூ.80 லட்சம் மதிப்பிலான ஹார்டுவேர்ஸ், பெயிண்டுகள், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின. மேலும் தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால், அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த தீவிபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெயிண்டு கடையில் ஏற்பட்ட தீவிபத்து சம்பவம் தென்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News