செய்திகள்
பீர் பாட்டிலால் வாலிபரை தாக்கி செல்போன்- மோட்டார் சைக்கிள் பறிப்பு
பீர் பாட்டிலால் வாலிபரை தாக்கி செல்போன், மோட்டார் சைக்கிளை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திரு.வி.க.நகர்:
சென்னை முகப்பேர் கிழக்கு 4-வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 19). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர், நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டு இருந்தார்.
மதுரவாயல் ரவுண்ட் பில்டிங் அருகே வரும்போது 3 பேர் கொண்ட கும்பல் லோகநாதனை மடக்கி, பீர் பாட்டிலால் தலையில் தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் அவரது மோட்டார்சைக்கிளை பறித்துச்சென்றுவிட்டனர்.
பீர்பாட்டிலால் தாக்கியதில் தலையில் காயம் அடைந்த லோகநாதன், ரத்தம் சொட்ட சொட்ட ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் அளித்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கத்தியுடன் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், அண்ணா நகரைச் சேர்ந்த சரவணன்(25), பாரதி (21) மற்றும் வேலூரைச் சேர்ந்த விநாயகம்(27) என்பதும், லோகநாதனை பீர்பாட்டிலால் தாக்கி செல்போன், மோட்டார்சைக்கிளை பறித்ததும் தெரிந்தது.
போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். புகார் அளித்த 20 நிமிடங்களில் குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.