செய்திகள்
மேட்டுக்கடை பஸ்நிறுத்தம் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர்- பயணிகள் அவதி
கடந்த சில மாதங்களாக அவ்வவ்போது பெய்து வரும் மழையால் மேட்டுக்கடை பஸ்நிறுத்தம் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
குண்டடம்:
கோவை-மதுரை மெயின் ரோட்டில் குண்டடத்தை அடுத்துள்ள மேட்டுக்கடை பஸ்நிறுத்தத்தில் அதிகளவில் பயணிகள் வந்து பஸ் ஏறி செல்லும் பஸ் நிறுத்தமாக உள்ளது. மேட்டுக்கடை மற்றும் அதன் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் இங்கு வந்து பஸ் ஏறி தாராபுரம், கோவை, ஒட்டன்சத்திரம், மதுரை, திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அதனால் எந்த நேரமும் இந்த பஸ் நிறுத்தம் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும்.
கடந்த சில மாதங்களாக அவ்வவ்போது பெய்து வரும் மழையால் இந்த பஸ் நிறுத்தத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து மழைநீர் நிற்பதால் அதில் கொசுக்கள் உருவாகி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும் வாகனங்கள் மழைநீரை கடந்து செல்லும்போது பஸ்சுக்கு காத்திருப்போர் மீது தண்ணீர் தெறித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே பஸ் நிறுத்தத்தில் மண்ணை கொட்டி மழைநீர் தேங்காமல் செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.