செய்திகள்
போலி தங்க காசு கொடுத்து மோசடி செய்த பெண் கைது
ஸ்ரீரங்கத்தில் போலி தங்க காசு கொடுத்து மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் மாணிக்கம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் சந்திரா (வயது 39). இவர் கடந்த 6-ந் தேதி காலை காய்கறி வாங்க மார்கெட் சென்ற போது, அவரிடம் 2 பெண்கள் தங்களிடம் 10 பவுன் தங்க காசு இருப்பதாகவும், அவசர தேவைக்கு அதை அடகு வைக்க வந்ததாகவும், ஆனால் தங்களை யாரென்று தெரியாததால் அடகு கடைக்காரர்கள் யாரும் வாங்க மாட்டேன் என்கிறார்கள். அவற்றை வைத்துக்கொண்டு அவசர தேவைக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளனர். ஆனால் தனது கையில் பணம் இல்லாததால், தான் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை சந்திரா கழற்றி கொடுத்துள்ளார். பின்னர் வீட்டுக்குச் சென்று அந்த தங்ககாசை பார்த்த போது அவை போலியானது என்று தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த இந்திராணி (30) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.